

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி கிராமம் மற்றும் கோலணிமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக 2 காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. தகவல் அறிந்த வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து மலைக்காய்கறி பயிர்களை சேதப்படுத்தின. அதோடு தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து உலா வந்தன.
இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். காட்டு யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், தொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.