கொரோனா உயிரிழப்பு விடுபடக்கூடாது: கலெக்டர்களுக்கு, தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விடுபடக்கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா உயிரிழப்பு விடுபடக்கூடாது: கலெக்டர்களுக்கு, தலைமைச் செயலாளர் உத்தரவு
Published on

சென்னை,

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எதிர்காலத்தில் கொரோனா இறப்பு தகவல்கள் விட்டுப் போகாமல் இருப்பதற்காக தொடர்ந்து ஆராயவும், கண்காணிக்கவும், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர் தலைமையில், மருத்துவக் கல்வி இயக்குனர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர், சென்னை நகர மருத்துவ அதிகாரி ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட மாநில அளவிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டத்திலும் உள்ள சுகாதார நிறுவனங்கள், மருத்துவமனைகளை, கொரோனா நோயாளிகளின் இறப்பு தொடர்பான அறிக்கை அளிப்பதில் மத்திய அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர். அளித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வலியுறுத்தும்படி இந்தக் குழுவுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட கலெக்டர்கள் அனைவரும், கொரோனா நோயாளிகள் மரணமடையும் நிலையில் யாரும் விடுபட்டுவிடாத வகையில், தினமும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசித்து சுகாதாரத் துறைக்கு தகவல் அளிப்பதில் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளின் இறப்பு தொடர்பான தகவல்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையுடன் தினமும் சரிபார்த்து, அதை உள்ளாட்சி அமைப்புகளின் உடல் எரிப்பு அல்லது புதைப்பு தொடர்பான பதிவுகளோடு ஒப்பிட்டு பார்த்து, எந்த ஒரு இறப்பும் விடப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com