

திருச்சி,
சிங்கப்பூரில் இருந்து 169 பயணிகளுடன் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு திருச்சிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் கொரோனா பாசிடிவ் என்ற சான்றிதழுடன் பயணம் செய்ய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அனுமதி அளித்திருந்தது தெரியவந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுக்கும், நோய் தடுப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே விமான நிலையத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், அந்த பெண்ணை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரம், அந்த பயணியை சோதனை செய்த அதிகாரிகளும், அந்த பயணியுடன் விமானத்தில் பயணம் செய்த 168 பயணிகளும் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா? என்று தெரியாமல் பீதியுடன் உள்ளனர்.