

சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்து 630 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 656 ஆண்கள், 415 பெண்கள் என மொத்தம் 1,071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 9 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 68 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 245 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 306 பேரும், கோவையில் 109 பேரும், செங்கல்பட்டில் 65 பேரும், சேலத்தில் 60 பேரும், திருப்பூரில் 59 பேரும், ஈரோடு, திருவள்ளூரில் தலா 43 பேரும் குறைந்தபட்சமாக அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கையில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, வேலூர் உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பெரம்பலூரில் புதிதாக ஒருவருக்கு கூட தொற்று இல்லை.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 32 லட்சத்து 23 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 207 ஆண்களும், 3 லட்சத்து 19 ஆயிரத்து 721 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 28 ஆயிரத்து 648 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 832 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 12 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 6 பேரும், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, தஞ்சாவூரில் தலா ஒருவரும் என 7 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 11,995 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 1,157 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும், கோவையில் 142 பேரும், செங்கல்பட்டில் 71 பேரும், திருவள்ளூரில் 52 பேரும், சேலத்தில் 51 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 472 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 9 ஆயிரத்து 495 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 928 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,022 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 470 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 882 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.