கொரோனாவுக்கு மனைவி இறந்த வேதனையில் மகனுடன் விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் பலி; திருவோணம் அருகே பரிதாபம்

கொரோனாவுக்கு மனைவி இறந்த வேதனையில் தனியார் நிறுவன ஊழியர் மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனாவுக்கு மனைவி இறந்த வேதனையில் மகனுடன் விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் பலி; திருவோணம் அருகே பரிதாபம்
Published on

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கொரோனாவுக்கு பெண் பலி

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன்(வயது 58). இவர் தனது மனைவி மீனா(45), மகன் மனோஜ் குமார்(26)(என்ஜினீயரிங் பட்டதாரி) ஆகியோருடன் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீனாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மீனா கடந்த மாதம் 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து மீனாவின் இறுதிச்சடங்குகள் அங்கேயே நடந்தது.

மாமனார் வீட்டுக்கு வந்தார்

கொரோனா தொற்றுக்கு மீனாவை பறிகொடுத்த வேதனை தாங்காமல் கனகராஜனும், அவரது மகன் மனோஜ் குமாரும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். மீனாவின் இறப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.இந்த நிலையில் கனகராஜன் தனது மகன் மனோஜ்குமாருடன் ஓசூரில் இருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள நரங்கியப்பட்டு கிராமத்தில் உள்ள தனது மாமனார் வேம்பையன் வீட்டில் வந்து தங்கியிருந்தார். இங்கு வந்த பிறகும் தந்தை-மகன் இருவரும் சோகமாகவே காணப்பட்டனர்.

மகனுடன் விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனகராஜன் அவரது மகன் மனோஜ் குமார் ஆகிய இருவரும் வீட்டில் உள்ள தனி அறையில் பிணமாக கிடந்தனர்.இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார், பிணமாக கிடந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கனகராஜன் தங்கி இருந்து அறையில் ஒரு கடிதம் இருந்ததை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மீனா சென்ற இடத்திற்கே நாங்களும் செல்கிறோம் என்று கனகராஜன் கைப்பட எழுதி இருந்தது தெரிய வந்தது.கொரோனாவுக்கு மனைவி இறந்த வேதனையில் மகனுடன் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com