தமிழகத்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 15,684 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,97,672 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மட்டும் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் என 94 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 651 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 13,625 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,76,876 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,07,145 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 4,250 பேரும், செங்கல்பட்டில் 1,142 பேரும், கோவையில் 1,056 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 365 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 97 ஆயிரத்து 672 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 62 ஆயிரத்து 772 ஆண்களும், 4 லட்சத்து 34 ஆயிரத்து 862 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com