தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் 1 சதவீதமாக குறைந்தது மருத்துவ துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் 1 சதவீதமாக குறைந்தது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் 1 சதவீதமாக குறைந்தது மருத்துவ துறை செயலாளர் தகவல்
Published on

சென்னை,

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்துக்கு இன்று (நேற்று) 6.93 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. மாநிலத்தில் முதல்முறையாக 21 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 1 சதவீதத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி அதிகமாக உள்ளது

கொரோனா பரவல் விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே உள்ள மாவட்டங்களில் பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்வதற்கும், 1 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களில் 1 சதவீதத்துக்கு குறைவாகவும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் தடுப்பூசி என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

தற்போது தடுப்பூசி அதிகமாக உள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மக்கள் வரத்து குறைந்துள்ளது. தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்த்து 2.7 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

2-வது தவணை

இந்தநிலையில் தமிழகத்தில் 10 லட்சம் பேர் கோவிஷீல்டு 2-வது தவணையும் மற்றும் 3.5 லட்சம் பேர் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசியையும் செலுத்தாமல் உள்ளனர். தமிழகத்தில் போலி தடுப்பூசி என்கிற நிலை இல்லை.

தொற்று குறைந்து வருகிறது என பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com