

சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கபட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடு திரும்பும் போது நடந்தப்படும் சோதனை வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.