

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் பெண் உள்பட 6 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு, ஆயிரம் எண்ணிக்கையை கடந்துள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் 1,460, திரு.வி.க.நகர் 1,188, தேனாம்பேட்டை 1,118 மற்றும் தண்டையார்பேட்டை 1,044 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.