கொரோனா வைரஸ் பரிசோதனை: தமிழகத்தில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

கோரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தால் தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரிசோதனை: தமிழகத்தில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
Published on

சென்னை,

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நேற்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீனா மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 13 ஆயிரத்து 115 பேர் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,351 பேர் தற்போது சுகாதாரத்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் 7 பேர் அரசு மருத்துவமனைகளில், மருத்துவ கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேருக்கு ரத்தம், சளி உள்ளிட்டவைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னை கிங் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக 5 ஆயிரம் பாதுகாப்பு உடைகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த உடைகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட உள்ளது. கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தமிழகத்துக்கு பயணம் செய்தவர்களின் பெயர் கொண்டு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com