சென்னை அண்ணாநகர் போகன்வில்லா பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தீடீர் ஆய்வு

பூங்காவினை தொடர்ந்து சிறப்பாக பராமரித்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சமீரன் அறிவுறுத்தினார்.
சென்னை அண்ணாநகர் போகன்வில்லா பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தீடீர் ஆய்வு
Published on

சென்னை,

சென்னை அண்ணாநகர் போகன்வில்லா பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் சமீரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இன்று (08.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், அண்ணாநகர் மண்டலம், வார்டு-102க்குட்பட்ட 6-வது நிழற்சாலையில் ரூபாய் 2.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்ட போகன்வில்லா பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கான நடைபாதை, செடிகள் பராமரிப்பு, உடற்பயிற்சி வசதிகள், யோகா கூடத்தின் பயன்பாடு, கழிவறை வசதிகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பூங்காவிற்கு தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வோரிடம் கலந்துரையாடி, பூங்காவின் பயன்பாடு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பூங்காவினை தொடர்ந்து சிறப்பாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட நடைபாதைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், வால்டாக்ஸ் சாலையில் உள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள பயணிகளிடம் கலந்துரையாடினார். பேருந்து நிறுத்த நிழற்குடையினைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com