

சென்னை,
தமிழகத்தில் மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 300 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. கொரோனா பரவல் விகிதம் 0.88 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களிடம் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக குருதி சார் அளவீடு ஆய்வு (Sero Survey) நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் வரும் திங்கள்கிழமை முதல் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது.
இந்த சோதனைக்காக சென்னையில் முன்களப் பணியாளர்கள், பணிக்கு செல்லும் மக்கள் என தோராயமாக 51 வார்டுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் பேரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் முடிவுகளின்படி எந்தெந்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.