கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

வ.புதுப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Published on

வத்திராயிருப்பு, 

வ.புதுப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அவசர கூட்டம்

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் பேரூராட்சி கூட்ட அரங்கில் அவசர கூட்டம் நடைபெறுவதாக கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அழைப்பு விடுத்தார். இந்தநிலையில் காலை அவசர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 10 கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.

இந்த கூட்டத்திற்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி சாந்தாராம் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கூட்டத்திற்கு உடனடியாக வருமாறு பேரூராட்சி தலைவரிடம் கூறினார். இதையடுத்து பேரூராட்சி தலைவர் கூட்டத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வலியுறுத்தினர். மேலும் பேரூராட்சியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பேரூராட்சியில் நிலவக்கூடிய பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என கூறினர். அதற்கு தலைவர் தற்போது கூட்டம் சம்பந்தமாக மட்டுமே விவாதிக்க வேண்டும். மற்ற விஷயங்களையும், கோரிக்கைகளையும் விவாதிக்க கூடாது என கூறினார். இதையடுத்து கூட்ட அரங்கில் இருந்து 10 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com