

சென்னை,
என் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து அட்வகேட் ஜெனரலிடம் இருந்து எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக பத்திரிகை வாயிலாக தான் தெரிந்து கொண்டேன். நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் என் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இதை மனதார பாராட்டுகிறேன்.
அதேவேளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் செல்லமேஸ்வரர் உள்பட 4 பேர் பகிரங்கமாக குற்றச்சாட்டை எழுப்பினர். கடந்த ஜனவரி மாதம் தலைமை நீதிபதி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தினர்.
அந்த பெண் வக்கீல் இதுகுறித்தும் ஒரு வழக்கு போட்டு, சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கலாமே? நான் ஒரு சாதாரண நபர் என்பதாலேயே அந்த பெண் வக்கீல் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
உண்மையிலேயே நீதி வெற்றி பெற்றிருக்கவேண்டும் என்றால், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டு இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்களும் தான் அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆனால் எந்தவித தவறும் செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. எனக்கு அனுப்பப்பட்டதாக கூறிய அந்த விளக்க நோட்டீஸ் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அந்த நோட்டீஸ் கிடைத்ததும், அதில் கூறப்பட்டவைகளை படித்து, சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.