அரசுப் பேருந்தில் ஏ.சி. இயங்கவில்லை என வழக்கு - கோர்ட்டு அதிரடி உத்தரவு

கோப்புப்படம்
மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள், அதிகாரிகள் தங்களது சொந்தப் பணத்தில் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
ராஜேஷ் என்பவர் கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையில் இருந்து நெல்லைக்கு ரூ.190 கட்டணமாக கொடுத்து அரசு ஏ.சி. பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பேருந்தின் ஏ.சி. இயங்காமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.
இதனால் ராஜேஷ் இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ராஜேஷ் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் பாதிக்கப்பட்ட ராஜேசுக்கு நஷ்ட ஈடாக ரூ.25,000, வழக்குச் செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள், நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தங்களது சொந்தப் பணத்தினை கொடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






