

தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அரியவகை பழங்களான ரம்புட்டான், துரியன் ஆகிய பழங்களை வாங்குவதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் சீசனின் உச்சக்காலமாகும். இந்த மாதங்களில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி மற்றும் சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.
இந்த குளுமையான சூழல் சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்க்கின்றன. எனவே, சுற்றுலா பயணிகள் அங்கு வந்து குளித்துச் செல்வது வழக்கம். இந்த சீசனில் குற்றாலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் அரிய வகை பழங்களான மங்குஸ்தான், ரம்புட்டான் மற்றும் துரியன் போன்ற பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படும்.
அதேபோல இந்த வருடமும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்காக சுற்றலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதே நேரத்தில், இங்கு விளையும் அரிய வகை பழங்களை வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.