கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்


கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
x

வேலை நிறுத்த போராட்டத்தால் அரசுக்கு தினமும் ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

சேலம்,

சேலம் மண்டல கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜா நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். குவாரிகளில் இருந்து கல் எடுத்து வர இதுவரை கனமீட்டர் அடிப்படையில் அரசுக்கு வரி செலுத்தி வந்தோம். ஆனால் தற்போது மெட்ரிக் டன் முறையில் வரி செலுத்த வேண்டும் என்று அரசு புதிதாக வரி விதித்து உள்ளது. இதனால் ஜல்லி, எம். சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவற்றுக்கு விலையை உயர்த்த வேண்டி உள்ளது.

எனவே புதிதாக விதிக்கப்பட்டு உள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். வேலை நிறுத்த போராட்டத்தால் அரசுக்கு தினமும் ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story