

சென்னை,
விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை ஒருவரை குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் சி.வி. சண்முகம் பேசியதாவது, ‘அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். மு.க.ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிறார். எனக்கு ஒரு நடிகை(நடிகையின் பெயரை குறிப்பிட்டு) வேணும் இவர் நிறைவேற்றுவாரா. நடிகையை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று கேட்பார்கள் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?’ என்றார்.
இதையடுத்து அவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகையின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும், அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் கூறி உள்ளார்.