சிலிண்டர் விவகாரம்: ஸ்டாலின் சார் டெல்லிக்கு போய் வலியுறுத்தலாமே..? - திருச்சி பிரசாரத்தில் விஜய்

100 சதவீதம் நியாமான ஆட்சியைக் கொடுப்போம், 100 சதவீதம் நீங்கள் இந்த விஜயை நம்பலாம் என்று கூறினார்.
சிலிண்டர் விவகாரம்: ஸ்டாலின் சார் டெல்லிக்கு போய் வலியுறுத்தலாமே..? - திருச்சி பிரசாரத்தில் விஜய்
Published on

திருச்சி,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். நேற்று மற்றும் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சிக்கு சென்றார். அங்கு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரம் செய்தார். திருச்சி கிழக்கில் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு எம்.ஜி.ஆ.ர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார்.

சிலிண்டர் பிரச்சனையால், டீ கடை, உணவகம் மூடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசு தான் முழு காரணம். ஸ்டாலின் சாருக்கு ஏதாவது பிரச்னை என்றால் டெல்லிக்கு பறந்து சென்று விடுவார். சிலிண்டர் பிரச்னையை தீர்க்க ஸ்டாலின் சார் டெல்லிக்கு போய் வலியுறுத்தலாமே?..

நாங்கள் சொல்வதை செய்வோம். அன்னபூரணி கேஸ் திட்டம் நிறைவேற்றப்படும். ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என உறுதியளித்தவர், கேஸ் மானியம், பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தீர்வு காணப்படும் என்று சொன்னீர்களே, செய்தார்களா..? எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதுதான் அவரின் வேலை.

கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி, ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பது கூட்டு சூழ்ச்சி. இந்த தேர்தலின் மிகப்பெரிய ஆயுதமாக ஜனநாயகன் திரைப்படம் மாறிவிடுமோ என சூழ்ச்சி செய்தனர் எனக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு நியாயம் கேட்கவே உங்களோடு சேர்த்து எனக்கும் நீதி கேட்டு வந்துள்ளேன்.

100 சதவீதம் நியாமான ஆட்சியைக் கொடுப்போம். 100 சதவீதம் நீங்கள் இந்த விஜயை நம்பலாம். நீங்கள் நம்புவீர்கள் என்று தெரியும். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

இங்கு ஒரு மந்திரி இருக்கிறார். நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ஏமாற்றுகிறார். வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியுள்ளார். வேலை வாங்கித் தராமல், நகராட்சித் துறையில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் என்றால் மற்ற துறை பாருங்கள். குறிப்பாக கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு அந்த போஸ்டிங்கிற்கு 2 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கொடுக்கவில்லை. வெறும் ஐந்து பேருக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வளோ பெரிய வசதியான வாழ்க்கையா இருந்தாலும் எல்லாத்தையும் உதறித் தள்ளி, நன்றிக்கடன் செலுத்த வந்திருக்கேன்.

அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன்.

தி.மு.க.வையும் நம்பாதீங்க, பா.ஜ.க.வையும் நம்பாதீங்க. ஆனால் 100 சதவீதம் என்னை நீங்கள் நம்பலாம். 100 சதவீதம் ஒரு நியாயமான ஆட்சியை நாங்கள் கொடுப்போம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

பெண்கள் அனைவரும் எந்த பேருந்தில் வேண்டுமானாலும் இலவசமாக செல்லலாம். கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை வசதி, பஸ் போகுவரத்து போன்ற அடிப்படை விஷயங்களில்தான் எங்கள் முதல் கவனம் இருக்கும்.

வரும் 23-ம் தேதி வீட்டில் இருக்கிற அனைவரையும் ஓட்டுபோட அழைத்துச் செல்லுங்கள். வெளியூரில் இருக்கிறவர்களையும் வர வையுங்கள். அசால்டாக இருந்து விடாதீர்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து " நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு..! கொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு.." என்ற பாடலைப் பாடி வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com