

இஸ்ரேல்-ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதுடன், வணிக பயன்பாட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு நகரங்களிலும் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. பல ஓட்டல்களில் கலவைசாதம் மட்டுமே கிடைக்கும் என்று போர்டு வைத்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.
டீக்கடைகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பஜ்ஜி, போண்டா போன்ற தின்பண்டங்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதுஒருபக்கம் இருக்க சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு டீ ரூ.10, ₹12க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.20ஆக உயர்ந்துள்ளது. காபியும் அதே அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் டீக்கடையில் விசாரித்தபோது, வணிக சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும், ரூ.5,000 கொடுத்து வாங்குவதாகவும் டீக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்துள்ளது தவிர்க்க முடியாததாகிறது என்றாலும், கள்ளச்சந்தையில் பதுக்கி இப்படி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.