தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

போக்குவரத்துக்கு இடையூறு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் கடை வீதியில் சாலையின் இறப்புறங்களிலும் ஏராளமான இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் கடைவீதியின் சாலையாக குறுகலாக உள்ளதால் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதில் சிரமமாக உள்ளது. இதனால் மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள் இனாம்குளத்தூர்

சுகாதார சீர்கேடு

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரில் அங்கன்வாடி மையம் பின்புறம் மலைப்போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றது, இதனால் கொசுக்கள் உற்பத்தியாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அதிகமாக நுர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை

திருச்சி மாவட்டம், கிராப்பட்டி முஸ்லிம் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் எனும் பெயரில் சாக்கடைகளை திறந்து வைத்துவிட்டு எவ்விதமான பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் சுமார் 5-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழுந்து விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கிராப்பட்டி

பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் கோவில்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் துவரங்குறிச்சி , மதுரை செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கோவில்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கோவில்பட்டி

சாக்கடை வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், வாழவந்தான் கோட்டை பஞ்சாயத்தில் கனகவேல் அவன்யூ 3 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களிலும் சாக்கடை வசதி முறையாக இல்லை. இதனால் அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வாழவந்தான் கோட்டை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com