பால் வளத்துறை வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் விஜயலட்சுமி ஆய்வு

பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்த பணிகள் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகத்தினை செயல்படுத்திட அனைத்து அலுவலர்களையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அமைச்சர் விஜயலட்சுமி
Published on

சென்னை,

பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறையின் நிர்வாகப் பிரிவு, நிதி பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு, கொள்முதல் பிரிவு, பொறியியல் பிரிவு, தர உறுதி பிரிவு, அம்பத்தூர் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட இதர பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைகள்

இந்த ஆய்வுக் கூட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர், மாநிலத்தின் பால் உற்பத்தி, பால் கொள்முதல், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் செயல்பாடுகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகள், பால் கூட்டுறவு நிறுவனங்களின் உள்கட்டமைப்பு செயல்பாடுகள், பணியாளர்களுக்கு செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கான நலத்திட்டங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை, கால்நடை பராமரிப்பிற்கான தரமான தீவனங்கள், தூய பால் உற்பத்தி மற்றும் பால்வளத்துறையின் தற்போது நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், எந்தெந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார். மேலும் பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்த பணிகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தினை செயல்படுத்திட அனைத்து அலுவலர்களையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் அனு ஜார்ஜ், இ.ஆ.ப., பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ச.கவிதா, இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com