

தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் தனது மகள், மகன் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணிமுத்து மகன் மரிய மைக்கேல் (வயது 45), லாரி டிரைவர். இவரது மனைவி சபிதாரோனிகம். இந்த தம்பதிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மரிய நிரோஷா(14) என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் மரிய கெனிஸ்டன்(12) என்ற மகனும் இருந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சபிதாரோனிகம் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மரிய மைக்கேல் தனது தந்தை மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்ட மரிய மைக்கேல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் 2 குழந்தைகளுடன் மரிய மைக்கேல் படுத்து தூங்கினார். வீட்டுக்கு வெளியே அந்தோணி முத்து படுத்திருந்தார். நள்ளிரவில் திடீரென எழுந்த மரிய மைக்கேல், தூங்கிக்கொண்டிருந்த மரிய நிரோஷா, மரிய கெனிஸ்டன் ஆகியோரின் கை, கால்களில் மின்சார ஒயரை சுற்றி வைத்து மின்சாரத்தை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு மரிய மைக்கேல் தனது காலிலும் மின்சார ஒயரை சுற்றிக்கொண்டு மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டிய கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். அங்கு மின்சாரம் தாக்கி 3 பேரும் சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள், மகனை மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்ட லாரி டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.