ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). இவர் ஏமன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலையில் இருந்தார். இதற்காக கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் அங்கு தங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நிமிஷாவின் கணவர் மற்றும் குழந்தை இந்தியா திரும்பினர். அவர் நாடு திரும்பும் நேரத்தில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷாவால் நாடு திரும்ப முடியவில்லை.

அவர் ஏமனில் தங்கி இருந்தபோது அந்த நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை ஒன்று தொடங்க திட்டமிட்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் மஹ்தியை கொலை செய்ததாக கடந்த 2017-ம் ஆண்டு நிமிஷா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். ஆனாலும் நிமிஷாவின் மரண தண்டனையை அந்த நாட்டு கோர்ட்டு உறுதி செய்தது. அவருக்கு வருகிற 16-ந்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிமிஷா தற்போது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிமிஷாவை காப்பாற்ற பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை சுப்ரீம்கோர்ட்டில் கேரள நர்ஸ் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், அவரது மனு மீது நாளை (ஜூலை 11ம் தேதி) விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com