தமிழ்த்தாய் தனித்தீர்மானம் மீதான விவாதம்; அமைச்சர் வன்னி அரசு பேச்சால் அவையில் சலசலப்பு

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இன்று கொண்டு வந்தார்.
வன்னி அரசு
Published on

சென்னை,

தமிழக கவர்னர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பின்னுக்கு தள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. முதல் அமைச்சராக விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பதவியேற்பு விழாவில் கூட அதே போல் பாடப்பட்டது.

கவர்னர் மாளிகை

சமீபத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் மாளிகை உத்தரவிட்டிருந்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்

இந்நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இன்று கொண்டு வந்துள்ளார். கல்வி நிறுவனம், அரசு அலுவலகம் என அனைத்து பொதுத்துறை நிறுவனம் நிறுவனங்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதல் அமைச்சர் விஜய் கொண்டு வந்து உரையாற்றினார். இந்த தீர்மானம் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பேசினர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் சலசலப்பு

முன்னதாக இந்த தீர்மானம் மீது பேசிய அமைச்சர் வன்னி அரசு கூறிய கருத்தால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. வன்னி அரசு கூறும் போது, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு ஆளும் கட்சி வரிசையில் தான் கைத்தட்டி வரவேற்றார்கள்; எல்லோரும் வரவேற்க வேண்டும்; இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான தீர்மானம்” என்றார். இதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய வன்னி அரசு எல்லோரும் வரவேற்றால் மகிழ்ச்சி..நான் குறையாக சொல்லவில்லை என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com