வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி: சீமான்

வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி: சீமான்
Published on

நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகமும் பிற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தலை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் ஆகஸ்ட் 5ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும்.

இதனை தொடர்ந்து, ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வேலூரில் அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தி.மு.க. வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்சிகள் சார்பிலும் ஏற்கனவே வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார். இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com