

சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து போக்குவரத்து அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில் தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பஸ்கள் மீதான சிறப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 12 மண்டல இணை மற்றும் துணை போக்குவரத்து கமிஷனர்கள் மூலம் செயலாக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 222 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அபராதமாக ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 500-ம், வரி ரூ.57 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இணக்க கட்டணமாக ரூ.4 லட்சத்து32 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்டது.
8 வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்ததற்காகவும், வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதற்காகவும் சிறைபிடிக்கப்பட்டது. சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த சோதனை வருகிற 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை 1800 425 6151 மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.