

சென்னை,
கடந்த, 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், ராதாபுரம் தொகுதியில், தி.மு.க. சார்பில் அப்பாவு, அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை போட்டியிட்டனர். இதில், 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவரது வெற்றியை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை, அப்பாவு தாக்கல் செய்தார். அதில், 'ஓட்டு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டுக்களில், 203 ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட்டன. கெஜட் அதிகாரி சான்றளிக்கவில்லை என, காரணம் கூறப்பட்டது. இந்த ஓட்டுக்களை எண்ணாமல் நிராகரித்தது தவறு என கூறப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிவு பெற்றதையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ணவும் உத்தரவிட்டுள்ளது. அக்.4 ஆம் தேதிக்குள் தலைமை பதிவாளரிடம் தபால் வாக்குகளை சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.