

சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
1967-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்து, பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, 1969-ல் கருணாநிதி முதல்-அமைச்சரான பிறகு, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு சட்டரீதியான வலுச்சேர்க்கவும், நடைமுறையில் கூடுதல் பலனளிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒடுக்கப்படுவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாய்ப்புகளுக்காக, சட்டநாதன் கமிஷன் அமைக்கப்பட்டது.
1989-ம் ஆண்டு, கருணாநிதி தலைமையில் தி.மு.க. அரசு மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது தான், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 30 சதவீத இடங்களை அவர்களுக்கு உறுதி செய்து, மீதி 20 சதவீத இடங்களை தனியாக பிரித்து, மிகப்பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பிரிவை உண்டாக்கி, அவர்களுக்கான இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 18 சதவீதம் முழுமையும் பட்டியல் இனத்திற்கும், பழங்குடியினருக்கு தனியாக 1 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கி ஆணையிட்டு நிறைவேற்றியவர், கருணாநிதி. இதுதான் தமிழ்நாட்டில் நிலவும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் வரலாறு. இந்த 69 சதவீத இட ஒதுக்கீடு என்பதை, எண்ணிக்கை அளவிலும் ஏற்றத்தாழ்வற்ற முறையிலும், அனைத்து சமூகத்தினருக்கும் கிடைக்க செய்தது, கருணாநிதி தான்.
அதேநேரத்தில், இடஒதுக்கீடு பறிபோவதை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திய ஜெயலலிதா அரசை கண்டித்து, சமூகநீதியை காக்கும் போராட்டத்தை முன்னெடுத்தவர் கருணாநிதி. அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தற்போது எம்.பி.யாக உள்ள திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருந்த அப்துல் லத்தீப் உள்ளிட்டோர் போராட்டக்களத்திற்கு ஆயத்தமாகி, தலைவரின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தபோது, கருணாநிதியுடன் போராட்டக் களத்திற்கு புறப்பட்ட தலைவர்களையும், கோபாலபுரத்திலேயே கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றியது தான் ஜெயலலிதாவின் அரசு.
தொடர்ச்சியான போராட்டக்குரலும், கண்டன அறிக்கைகளும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சட்டரீதியாக வழங்கிய கருத்துருவும், ஜெயலலிதாவின் கண்களை மெல்ல திறக்கச் செய்தன. அதன்பிறகே, சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்கப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்பட்டது. அதன்பிறகும் கூட, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்குகளால் இன்றளவிலும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்திட தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தவேண்டியுள்ளது.