

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
காவிரி பாசனத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் மின் தட்டுப்பாட்டாலும் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழாகக் குறைந்தால், பாசனத்துக்கு ஜூன் 12ஆம் தேதி அணை திறப்பது தள்ளிப்போகும்.
கடந்த 4 ஆண்டுகளாக மேட்டூர் அணை குறிப்பிட்ட காலக்கெடுவான ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்கு திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையாத காரணத்தால், கர்நாடக அணைகளில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தமிழகத்துக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை.
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், அணையின் நீர்மட்டம் நேற்று 79 அடியாக இருந்தது. அதனால் அணை திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவரை 11 முறை ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பாக பாசனத்துக்கு அணை திறக்கப்பட்டுள்ளது. 20 முறை சரியாக ஜூன் 12ஆம் தேதி அணை திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாத காரணத்தால் 61 முறை அணை திறக்கப்படவில்லை.
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. மேலும் குறைந்த அழுத்த மின்சாரம், மின்சாரப் பற்றாக்குறையால் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் நடவு செய்யப்படவில்லை. ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.40,000 செலவு செய்துள்ள விவசாயிகள் உற்பத்திச் செலவைக்கூட பெற இயலாத நிலையில் உள்ளனர். எனவே, காவிரி பாசனத்திற்கு உட்பட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அரசு அறிவித்து, வறட்சி நிவாரணத் தொகையை வழங்கி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.