உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரிஇந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரிஇந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

தூத்துக்குடியில் சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி கிழக்குரத வீதி தேரடி அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட அமைப்பாளர் நாராயணராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முத்துராஜ், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் குற்றாலநாதன், நெல்லை கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில் சனாதனம் குறித்து அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம், இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 20 பெண்கள் உள்பட 160 பேரை மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com