

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் வேலாயுதம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் பழனியப்பன் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணினி ஆபரேட்டர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நலன்கருதி 25 ஊராட்சிகளை கொண்ட ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கோபிநாத் நன்றி கூறினார்.