

ராமநாதபுரம்,
கடந்த 23 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இன்று கைக்குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.