

சென்னை,
அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்கக்கோரி கோவில் அடிமை நிறுத்து' இயக்கம் சார்பில் 11 பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்கள் பாடி ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோவில் அடிமை நிறுத்து இயக்கம்
இந்தியாவில் இருக்கும் மற்ற மத வழிபாட்டு தலங்களைப் போல, இந்து கோவில்களையும் இந்து மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழக அரசுக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்கக்கோரி, கோவில் அடிமை நிறுத்து' என்ற இயக்கத்தை ஜக்கி வாசுதேவ் தொடங்கியிருக்கிறார்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பக்தி பாடல்கள் பாடி...
இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், கோவையில் மருதமலை முருகன் கோவில், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில், புதுச்சேரியில் வேதபுரீஸ்வரர் கோவில், சேலம் பாண்டுரங்கன் கோவில், பவானி சங்கமேஷ்வரர் கோவில், சுசீந்திரம் ஸ்ரீ தானுமலையான் கோவில், சென்னை மருந்தீஸ்வரர் மற்றும் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் சிவன் கோவில் ஆகிய 11 பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்கள் பாடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் சிவன் கோவிலில் பொதுமக்கள் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை தேவாரம் பாடல்களை பாடி தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து, கோவில் முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, கோவில் அடிமை நிறுத்து' என்ற பதாகையை கையில் ஏந்தி நின்றபடி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.