டெங்கு, மலேரியா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொசு ஒழிப்புப் பணிகளில் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
“இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சராசரியாகப் பெய்ய வேண்டிய 86.7 செ.மீ மழையில், இதுவரை 24.9 செ.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இருப்பினும், சுகாதாரத் துறை முழு வீச்சில் தயாராக உள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 16,648 சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 78 ஆயிரத்து 34 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர். இந்த முகாம்கள் மூலம் 5,829 காய்ச்சல் பாதிப்புகளும், 51,107 இருமல், சளி பாதிப்பு களும் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு தெருவில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இதுவரை 18,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிர்ஷ்டவசமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளும் இணை நோய்கள் மற்றும் தாமதமாக மருத்துவமனையை அணுகு வது போன்ற காரணங்களால் நிகழ்ந்துள்ளன. உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்குவதே அரசின் நோக்கம். கடந்த காலங்களில், 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்தனர். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தடுப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டதால் உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
டெங்குவைக் கண்டறிய மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 4,755 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இது இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் உள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.டெங்கு மட்டுமல்லாமல், மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு, எலிக்காய்ச்சல் போன்ற பிற மழைக்கால நோய்களின் பாதிப்பும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளது. நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநிலம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.”
இவ்வாறு அவர் கூறினார்.






