டெங்கு காய்ச்சல்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் மாத்திரை சாப்பிட்டு வந்த ஹரிஷ்குமார் என்ற மாணவர் இன்று உயிரிழந்துள்ளார்.
டெங்கு காய்ச்சல்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,577ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து படித்து வரும் மாணவ, மாணவிகள் சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 2 பேர் உயிரிழந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் கடந்த 4 நாட்களாக மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த ஹரிஷ்குமார் என்ற மாணவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com