ஐகோர்ட்டு கேள்விகளுக்கு துறை செயலாளர்கள், தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டு எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டு கேள்விகளுக்கு துறை செயலாளர்கள், தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழக வருவாய் துறையில் துணை கலெக்டராக பணியாற்றிய ஜெயராம் என்பவர், மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெற்ற போதும், அரசின் காலதாமதத்தால் பணி ஓய்வுக்கு முன் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்ததால் பதவி உயர்வு வழங்கும்படி உரிமை கோர முடியாது என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயராமன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு, 41 துணை கலெக்டர்களின் பெயர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வு பட்டியலில் இருந்த நிலையில் 10 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், தமிழக பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், கடும் அதிருப்தி தெரிவித்தனர். பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கத்தில் கோர்ட்டு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. துறையின் செயலாளர் விளக்கம் அளித்திருந்தால் கோர்ட்டு கேள்விக்கு பதிலளித்திருப்பார்.

ஐகோர்ட்டு எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டு எழுப்பிய கேள்விக்கு விளக்கமாக பதிலளிக்க வேண்டும் என பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com