

சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி கொடி கட்டிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.