

சென்னை,
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் இன்று மாலை 4 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென கையில் வைத்திருந்த விஷ பாட்டிலை திறந்து, விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக காவல் பணியில் இருந்த போலீசார் விஷ பாட்டிலை பிடுங்கி எறிந்து, இளம்பெண்ணை காப்பாற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து விஜயலட்சுமி போலீசாரிடம் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் கூறும்போது, தான் உயிருக்கு உயிராக காதலித்த வாலிபர் ஒருவர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். தன்னை ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து வேப்பேரி போலீசார் விஜயலட்சுமியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.