4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

கச்சிராயப்பாளையம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்த 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகள் 11 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் கல்வராயன்மலையில் உள்ள குரும்பாலூர், சேராப்பட்டு பகுதிகளில் சென்னை வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ வெல்லம், 5 கிலோ கடுக்காய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாராய ஊறல்

மேலும் 1500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 450 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார், குரும்பாலூர் வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து இதில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com