

சென்னை,
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராயபுரம் மண்டலத்தில் ரூபாய் 3.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான சேகர் பாபு இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான சேகர் பாபு அவர்கள், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ராயபுரம் மண்டலம், வார்டு-54க்குட்பட்ட பெத்து தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூபாய் 1.10 கோடி மதிப்பீட்டில் சிவஞானம் பூங்கா மேம்படுத்தும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ராயபுரம் மண்டலம், வார்டு-55க்குட்பட்ட, சண்முகம் தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 1.10 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி பகுதி அலுவலக் கட்டடம் கட்டும் பணி மற்றும் வார்டு-57க்குட்பட்ட, பிரகாசம் சாலையில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 1.61 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீராமுலு பூங்கா மேம்படுத்தும் பணி அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் தாஹா நவீன், மண்டல அலுவலர் விஜய்பாபு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எஸ்.ராஜசேகர், எஸ்.முரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.