திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தீக்குளித்த பக்தரால் பரபரப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
திருச்செந்தூர் கோவில்
கோப்புப்படம்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீக்குளித்த பக்தர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இன்று காலையில் வழக்கம்போல் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த சக பக்தர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அந்த நபரைக் காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் வளாகத்தில் தீக்குளித்தவர் கழுகுமலை அருகே கஸ்தூரிரங்கபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சுரேஷ் (38 வயது) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விட்டது. இவருக்கு குழந்தை இல்லை.

கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் திருச்செந்தூர் கோவில் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், அவர் திடீரென்று தீக்குளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com