தருமபுரம் ஆதீன பிரவேச விவகாரம்: முதல்-அமைச்சர் தலையிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டும் - கோவை பேரூர் ஆதீனம் பேட்டி

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.
தருமபுரம் ஆதீன பிரவேச விவகாரம்: முதல்-அமைச்சர் தலையிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டும் - கோவை பேரூர் ஆதீனம் பேட்டி
Published on

கிணத்துக்கடவு

கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கிணத்துக்கடவில் நிருபவர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சில நாட்களாக நம்முடைய சமயத்தின் மீது பல்வேறு வகையான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகின்றார்கள். சிதம்பர நடராஜ சுவாமி குறித்து சமூக வலைத்தளத்தில் இந்துக்கள் மனம் புண்படும்படி பேசி வருகின்றனர்.

பிற சமயங்களில் எத்தனையோ மூடநம்பிக்கைகள் இருக்கின்ற போது நம்முடைய சமயத்தை குறிபார்த்து தொடர்ந்து செயல்பட்டு வருவது மிகவும் வருத்தத்திற்குரியது.

இந்த விஷயத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத துறவிகள் சங்கத்தின் சார்பாகவும், ஆதீனங்களின் சார்பாகவும், இந்து மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம்.

அதேபோல தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும் பட்டினப் பிரவேசம் செய்வது நடைமுறையில் உள்ளது. ஏனென்றால் குருவே சிவம் என்பது திருமூலரின் கொள்கை. குருவையே சிவனாக நினைத்து அவர்களது திருமடத்தை சுற்றி வலம் வருவது என்ற மரபை வைத்திருக்கின்றார்கள்.

அந்த மரபு திருமடத்தினுடைய மரபு. அது யாரையும் துன்புறுத்துவதில்லை. யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. இந்த செயல்பாட்டிற்கு ஆர்.டி.ஓ. தடை விதித்தது மிகவும் வருத்தத்திற்குரியது.

பிற சமயத்தினுடைய நடைமுறைகளில் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிப்பதில்லை. ஆனால் இந்து சமயத்திலே அளவுக்கதிகமான முறையில் தடை விதித்திருப்பது அனைத்து சைவ மக்களையும், இந்து மக்களையும் மிகவும் புண்படுத்தி இருக்கின்றது. உடனடியாக முதல்-அமைச்சர் தலையிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com