தர்மபுரி: ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள் திருட்டு

பள்ளி முடிந்தபின் வீட்டுக்கு திரும்பி ஆசிரியை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தர்மபுரி: ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள் திருட்டு
Published on

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வீட்டில் வசித்து வருபவர் ஷேர்லின்பெல்மா. இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஓய்வுபெற்ற ஆசிரியையும், தனது தாயாருமான மேரியுடன் ஷேர்லின்பெல்மா வசித்து வந்துள்ளார்.

மேரி மருத்துவ சிகிச்சைக்காக, வேலூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷேர்லின்பெல்மா வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்தபின் மீண்டும் வீட்டுக்கு அவர் திரும்பி வந்தார். அங்கு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிரோவில் வைத்திருந்த அவரது 70 பவுன் தங்க நகையையும், மேரியின் 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்தையும் மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ஷேர்லின்பெல்மா போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com