தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்வரதட்சணை கேட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி தர்ணா

தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்வரதட்சணை கேட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி தர்ணா
Published on

காரிமங்கலம் அடுத்த பூனார்த்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 32). இவருடைய மனைவி மஞ்சுளா (27). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று கணவன், மனைவி குழந்தையுடன் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தர்ணாவில் ஈடுபட்ட தம்பதிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மஞ்சுளா ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் தனக்கு மாமனார் சென்னகேசன், மாமியார் விஜயா மற்றும் உறவினர்கள் வரதட்சணை கேட்டு பிரச்சினை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் என்னையும், கணவரையும் மாமனார், மாமியார், உறவினர்கள் தாக்கினர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தும், போலீசார் எதிர்தரப்பினர் கொடுத்த பொய் புகாரின்பேரில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

எனவே ஒரு தலைபட்சமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், வரதட்சணை கேட்டு தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கணவன்- மனைவி இருவரும் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com