

சிதம்பரம்,
சிதம்பரம் கள்ளுக்கடை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 32).இவர் சம்பவத்தன்று தனது நண்பர் சுபன் உள்ளிட்ட நண்பர்கள் சிலருடன் சேர்ந்த முன்விரோதம் காரணமாக, அதேபகுதியை சேர்ந்த ராமு என்கிற உண்டி ராமு என்பவரை வழிமறித்து திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உண்டி ராமு கொடுத்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் நேற்று சரவணன், சுபன் ஆகியோரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சரவணனின் மனைவி ஞானமணி (25) போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து போலீசாரிடம் மேற்கண்ட பிரச்சினைக்கும், எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஞானமணி தனது கணவரை விடுவிக்கவேண்டும் என கூறி போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் படுத்தபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைபார்த்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பெண் போலீசார் மூலம் ஞானமணியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.