

சென்னை,
சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி என தலைவர்களின் பரபரப்பு பேட்டிகள் அரசியல்களத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்க டத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 15ம் தேதி நடந்த காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவரது பேச்சு சர்ச்சையாக அமைந்திருந்தது. மேலும் கூடுதல் தொகுதிகளோடு, ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதுவும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் மேலிடத்தலைவர்கள் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அவசரமாக பெங்களூரு புறப்பட்டு சென்றார். திமுகவை விமர்சித்த விவகாரத்தில் செல்வப்பெருந்தகை கார்கேவிடம் புகார் அளித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில் பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி “அச்சம் இல்லை அச்சம் இல்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் இன்று காலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காலை வணக்கம்...
தேடிச்சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.