

வேலூர்,
வேலூர் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் 77 வயது ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் உங்களுக்கு தீவிரவாத செயல்களில் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண் எங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களை நாங்கள் டிஜிட்டல் கைது செய்கிறோம். உங்களது நிதி பரிவர்த்தனைகளை விசாரணைக்காக ஆய்வு செய்ய வேண்டும். அதனால் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என நம்பிய அவர், தனது வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார். அதைப் பார்த்துவிட்டு உங்களது பணப் பரிவர்த்தனைகளில் சந்தேகங்கள் உள்ளன. எனவே நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புங்கள். அதை சரிபார்த்துவிட்டு திரும்ப உங்களது வங்கிக் கணக்கிற்கு திருப்பி அனுப்புகிறோம் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரும் பல தவணைகளாக ரூ.10 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் அந்த நபர் அவரை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.