ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மரணம்

ராணுவ வீரர் சரணின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர்.
ஆபரேஷன் சிந்தூரில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சரணும் பணியாற்றினார். சரண் கடந்த 8 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில், சரண் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். கடந்த 22ம் தேதி ராணுவ வீரர் சரண் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, சரணின் உடல் நேற்று சொந்த ஊரான முத்துசாமிபுரத்திற்கு கொண்டுவரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.






