திண்டுக்கல்: 30 அடி உயர கூரையில் ஏறி பெற்றோரை கதறவிட்ட 7-ம் வகுப்பு மாணவன்

ஒரு மணி நேர தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு தீயணைப்பு படையினர் சிறுவனை பத்திரமாக கீழே இறக்கினர்.
30 அடி உயர கூரையில் ஏறி பெற்றோரை கதறவிட்ட 7-ம் வகுப்பு மாணவன்
7-ம் வகுப்பு மாணவன்
Published on

செம்பட்டி,

பள்ளிக்கு செல்ல மறுத்து 30 அடி உயர வீட்டின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக அடம் பிடித்த 7-ம் வகுப்பு மாணவனை தீயணைப்பு துறையினர் சாதுர்யமாக பேசி மீட்டனர்.

பள்ளிக்கு போக மாட்டேன்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமபாலாஜி. கூலித்தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்ராம் (வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம் போல் சஞ்சய்ராமை பள்ளிக்குச் செல்லும்படி அவனது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் படிப்பில் நாட்டமில்லாத அந்த சிறுவன், தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறி அடம் பிடித்துள்ளான். அவனுக்கு பெற்றோர் அறிவுரை கூறி சமாதானம் செய்ய முயன்றனர்.

கூரை மீது ஏறினான்

பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சிறுவன் சஞ்சய்ராம், திடீரென ஓடி சென்று தனது வீட்டின் 30 அடி உயர மேற்கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். மேலே ஏறியவன் கீழே இறங்கி வர மறுத்து அடம் பிடித்தான்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவனிடம் கீழே இறங்கி வரும்படி கெஞ்சினர். ஆனால் சிறுவன் யாரின் பேச்சையும் கேட்காமல் அங்கேயே பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.

3 மணி நேரம்

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த இழுபறி நீடித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக செம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு கூரையின் மீது ஆபத்தான முறையில் அமர்ந்திருந்த சிறுவனை மீட்க, தீயணைப்பு வீரர் அந்த சிறுவனிடம் சாதுர்யமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிறுவனின் மனம் மாறியது

சுமார் ஒரு மணி நேர தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறுவனின் மனம் மாறியது. தீயணைப்பு படையினர் சிறுவனை பத்திரமாக கீழே இறக்கினர். சஞ்சய்ராமை தீயணைப்புத்துறையினர் அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளிக்கு செல்ல மறுத்து 30 அடி உயரக் கூரையில் ஏறி சிறுவன் அடம் பிடித்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com